இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி நாடெங்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்வச்சபாரத் தூய்மை இந்தியா நடவடிக்கைகளில் தற்போது நடைபெரும் 'ஸ்வச்ச ஹி சேவா' தூய்மையே சேவை நிகழ்வுகளின் நிறைவாக நேற்று (02.10.2017) காந்தி ஜெயந்தி தினத்தன்று தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் அனைத்து ரயில் நிலையங்களிலும் காலை 10 மணி முதல் நடைபெற்றது.

தெற்கு ரயில்வே சார்பில் தூய்மை இந்தியா இயக்க திட்ட விழா செப்.15-ம் தேதி முதல் அக்.2-ம் தேதி வரையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தெற்கு ரயில்வேத்துறையினர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஈரோடு அருகே உள்ள காவிரி ஆற்றங்கரையோர வங்கிகள், காவிரியோர ரயில்நிலையங்கள் மற்றும் குறிப்பிட்ட காவிரி ஆற்றுப்பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

இதனிடையே, காவரி ஆற்றுப்படுகையில் தூய்மைப் பணியை சேலம் ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா தொடங்கி வைத்தார். இதில், சேலம் ரயில்வே ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கம் மற்றும் இதர தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 600-க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை ஈரோடு மாவட்ட எம்.பி. எஸ். செல்வக்குமார சின்னையன் ஆய்வு செய்து, தூய்மைப்படுத்தும் பணிகுறித்து சேலம் ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மாவிடம் கேட்டறிந்தார்.